Saturday, March 21, 2020

கொரோனா அல்லது கோவிட்-19 எளிய தமிழில்

வாட்ஸாப்ப்(whatsapp)  மற்றும் முகநூலில் உள்ள பல தவறான தகவல்களை பார்த்து நொந்து போய் இதை எழுதுகிறேன்,
தயவுசெய்து, வெயிலில் கொரோனா பரவாது, எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது, அன்றே முன்னோர் சொன்னார், முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை, கோமியம் குடியுங்கள், ரசம் மற்றும் வேப்பிலை இரண்டே நாட்களில் கொரோனாவை குணப்படுத்துகிறது போன்ற செய்திகளை அனுப்பியவனை மனதுக்குள் ரெண்டு கெட்டவார்த்தை திட்டி மெசேஜ் ஐ அழித்துவிடுங்கள் முடிந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கிவிடுங்கள் . தயவு செய்து அதை பிறருக்கு அனுப்பாதீர்கள்/பரப்பாதீர்கள்.

உண்மையில் இந்த இணையவெளியில் அனைவரும் வந்த பின் தான், பெரிய அறிவாளிகள் என்று எண்ணி கொண்டு இருந்தவர்களின் முட்டாள்தனங்கள் வெளியே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை, ஈமெயில் கணக்கு தொடங்கிய காலத்தில் ஒரு தடவை என் நண்பனுக்கு 100  கோடி ருபாய் பரிசு விழுந்துள்ளது வந்து வாங்கிக்கோங்க என்று இருந்த ஈமெயில் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கவுண்டமணி பாணியில் இந்த ரோடு என்ன விலை, சென்னையில் பாதி என்ன விலை இருக்கும் என்று லூசுத்தனமாக பேசிக்கொண்டு அதில் இருந்த தொடர்புக்கு போன் பண்ணிய போது ஒரு லட்சம் கேட்டதும் ஜகா வாங்கியது ஞாபகம் வருகிறது. இந்த இணையவெளியில்  பல சைக்கோக்கள் உலவுகின்றனர் அனைவருக்கும் அந்த ஐந்து நிமிட புகழ் என்பது ஒரு போதையாகிவிட்டது அதற்காக மாட்டு மூத்திரம் குடிக்கவும் தயங்குவதில்லை. முன்பு லெட்டர் போட்டு நீ இன்னும் பத்து பேருக்கு அனுப்பிவிட்டால் உனக்கு ஆய் வராது என்ற ரீதியில் மிரட்டுபவர்கள் இன்று இணையத்தில் அதை தொடர்கின்றனர் களம் மாறுகிறது அவ்வளவே.

  சரி கொரோனா பற்றி பாப்போம் இந்த சைக்கோக்களை திட்ட தனி புத்தகம் வேண்டும்.

அனைத்து அரசாங்ககங்களின் தற்போதைய டார்கெட் அதாவது குறிக்கோள் 'Flattening  the  curve ' தான். அதாவது எத்தனை பேர் ஒரு நாளைக்குள் நம் மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள் என்பதை ஒரு க்ராப்(graph ) போட்டோமேயானால் நம் மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி மற்றும் எத்தனை பேர் மருத்துவமனைக்கு தீவிர நோய் அறிகுறியோடு வருகிறார்கள் என்பது தெரியும். கீழே உள்ளது போல,
Curve2


நம் மொத்த மருத்துவமனைகளின்  படுக்கை எண்ணிக்கை  ஆயிரம் ஆக இருக்கும்பொழுது ஒரு லட்சம் மக்கள் நோயின் அறிகுறிகளோடு வந்தால் நினைத்து பாருங்கள், அந்த curve ஒரு சுனாமியாக மாறி நம் மொத்த மருத்துவமனைகளையும் திக்குமுக்காட வைத்து விடும். இதில் அதி தீவிர கண்காணிப்பு தேவை படும் நபர்களின் நிலை தான் கவலைகொள்ள வைக்கும், கொரோனாவினால் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்தவர்கள், தானே சுவாசிக்க முடியாத நிலை வரும்பொழுது அவர்களுக்கு வெண்டிலேட்டர் சுவாச கருவி தேவைப்படும், அப்பொழுது ஏற்கனவே பலர் ICU - அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்பொழுது, டாக்டர்கள் யாருக்கு கொரோனாவை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்றுபார்த்து 60  70  வயது கடந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் கையறுநிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தாலியில் அதுபோன்று செய்துவிட்டு கண்முன்னே செத்துப்போகும் நபர்களை கண்டு அழுத செவிலியர்களின் நிலைதான் இங்கும் வரும். நினைக்கவே  மனம் பதைபதைக்கிறது. இதற்கு என்ன தான் வழி என்கிறீர்களா? கொஞ்சம் நேரம் முன்பு சொன்னோமே 'Flattening  the  curve ' அதுதான். அமெரிக்காவின் CDC சொல்லியபடி, 'It is not a matter of If, it is a matter of when'  அதாவது கொரோனா வருமா என்பதல்ல கேள்வி எப்பொழுது வரப்போகிறது என்பதுதான். அது வரும்போது அத்தனை பேருக்கும்  ஒரே நேரத்தில் வராதவாறு இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். எனவே 1000 படுக்கைகள் மொத்த இருப்பு மருத்துவமனைகளில் என்று வைத்துக் கொண்டால், ஒரே நேரத்தில் 1000த்திற்கும் குறைவான பேர் அல்லது ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்க பட்டால் நம்மால் நிர்வகிக்க முடியும் அதுதான் 'flattening the curve' .  இங்கு தான் 'Social Distancing' வருகிறது, அதாவது சுய சமூக விலகல், அதிக மக்கள் கூடும் இடங்கள், நண்பர்கள் மற்றும் சொந்தங்களை சந்தித்தல், கேளிக்கை அரங்குகள், சினிமா அரங்குகள், பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம் போன்று மக்கள் நிறைந்த இடங்களை தவிர்க்க பாருங்கள். டிவி பாருங்கள், வீட்டில் குடும்பத்தினரோடு நேரம் செலவிடுங்கள், குடும்பத்தினரும் வெளியே சென்று வருதல் இல்லாமல் :) 

நீ இளவயது, எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளவனாக இருக்கலாம், அல்லது சூனாபானாவாக இருக்கலாம், சுருக்கமாக பெரிய புடுங்கியாக இருக்கலாம். உனக்கு வரும் வைரஸ் காய்ச்சல் ஓரிரண்டு நாட்களில்,வாரங்களில்  குணமாகிவிடலாம், ஆனால் நீ வெளியே போய்   தும்மும் ஒருமுறை உன்னை சுற்றி இருக்கும் 5 பேருக்கு பரவும்(5 பைசா திருடறது தப்பா) ஐந்து ஐநூறாகும்,ஐநூறு பிரளயத்தை கொண்டு வரும்...

உயிர் வரை பாதிக்கப்படுவது 50 வயது தாண்டியவர்களும், கர்ப்பிணிகளும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கான்செர், நீரிழிவு, எய்ட்ஸ், டிபி நோயாளிகள் தான். 

chaos Theory போல இங்கே நீ தும்முவது சூறாவளி ஆகக்கூடும். 

முப்பது அல்லது நாப்பது வயதுடையவர்கள் நம் ஊரில் அதிகம், அவர்களுக்கு  மருத்துவ உதவி தேவை, அது  கிடைப்பின் தேறிவிடுவார்கள், ஆனால் ஒரே நேரத்தில் அனைவரும் மருத்துவமனை போக நேர்தல்  கூடாது. 

வெயில் படும் இடத்திலுள்ள வைரஸ் நம் ஊரில் அதிகம் தாக்குபிடிக்காது என்பது உண்மை!!! பிற நாடுகளில் நோய்  பாதிப்புள்ள ஒருவர் தும்மி விட்டு போன இடத்தில் கை வைக்கும் ஒரு நபர் அவர் முகம் அருகே கொண்டு போகும் பொது பாதிக்கப்படுகிறார், அங்கே வெயில் கம்மி வைரஸ் அதிக நேரம் தும்மிய இடத்தில் இருக்கும். இங்கே அந்த மறைமுக வைரஸ் பரப்பல் எல்லாம் இல்லை, நம் ஊரில் முகத்துக்கு நேரே தும்மும் இருமும் பழக்கம் தான் அதிகம். நம்மை குற்றம் சொல்ல முடியாது. எனவே வெளியே செல்வதை அறவே குறைத்து விடுங்கள்.

மக்கள் செய்த/செய்யும் முட்டாள்தனங்கள்:


கொரோனா அல்லது கோவிட்-19 சில முக்கிய விஷயங்களை நினைவில் கொள்க,

1. நிலைமை சீரடையும் வரை வெளியே போகாதீர்கள் 
2. தவிர்க்க முடியாமல் வெளியே போய் வந்தால் ஒரு குளியல் போட்டு விடுங்கள். 
3. லோக்கலில் அடிக்கடி போக வேண்டிய நிலை வந்தால், முகம் அருகே  கையை கொண்டு போவதை தவிர்க்க பாருங்க, கஷ்டம் தான். வீடு வந்தவுடன் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கையை 20 நொடிகள் தொடர்ந்து சோப்பு போட்டு கழுவவும். இந்த 'Hand Sanitizer' விடவும் கையை சோப்பு போட்டு கழுவுவது சால சிறந்தது.
4. நாம் உள் நுழையும்போது வழக்கமாக தொடும் இடங்களை, கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது துடைத்து விடுங்கள். யாரேனும் வீடு வந்தாலும் இதை செய்யவும். அவர்களையும் கை கழுவ சொல்லி விட்டு பேசவும். வணக்கம் வைக்க டிரம்ப் ட்ருடோ போல் பழகிக்கொள்ளுங்கள், நம் முன்னோர்கள் அன்று வணக்கம் தான் வைத்தார்களாம்.
5. உங்கள் உடலினுள் கிருமி நுழைந்த நாளில் இருந்து உடலில் முதல் அறிகுறி தோன்ற குறைந்தது ஒரு நாள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். மிக அதிக பேருக்கு 5 நாட்களில் அறிகுறி வரும். அறிகுறி வரும் முன்னரே கிருமி பரப்ப தொடங்கி விடுவர். எனவே எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது கூட்டம் தவிர். 
6. உங்களின் எதிர்ப்பு சக்தியை கூட்ட என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ செய்யுங்கள், மனைவி திட்டும்போது எதிர்த்து பேசுவது எதிர்ப்பு சக்தியில் சேர்த்து இல்லை.
7. முடிந்தவரை சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யவும், youtube இல் 10 நிமிட உடற்பயிற்சி, வீட்டில் இருந்தே உடற்பயிற்சி என்று வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. அதிகம் நல்ல கமெண்ட்ஸ் இருக்கும் வீடியோ முறையை செய்யவும்.
8. சிகரட், தண்ணி அடிப்பது கொரோனா  வந்தால் பரமபதம் அடைய சுலபவழி . அறவே தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே அடி  வாங்கி இருக்கும் நுரையீரலும் கல்லீரலும் தாங்காது.
9.  இரத்த அழுத்தம், நீரிழிவு, சக்கரை இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்த 12 மணி டிவி புகழ் ஹீலர்கள் சொல் பேச்சு கேட்டு மாத்திரை மருந்து எடுக்காமல் இருக்காதீர்கள், இவை கட்டுக்குள் இருந்தால் உங்கள் மருத்துவ அட்மிட் நாட்கள் கணிசமாக குறையலாம், வாய்க்குள் கண்ட கண்ட tubeகள் டேஸ்ட் நன்றாக இருக்காது,நர்ஸ்களும் முகம் மூடி கொண்டுதான் வருவார்கள் யோசித்துக்கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூச்சடைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கிறது என்றால் Tamilnadu Coronavirus Helpline Number: 044-29510500; எண்ணுக்கு கால் செய்யவும். மெயில் 'ncov2019@gmail.com'. அதிகம் மக்கள் இருக்கும் மருத்துவமனைகளில் முன்னறிவிப்பு இன்றி செல்ல வேண்டாம். 
 11. காய்ச்சலுக்கு paracetamol (பாராசிட்டமால்) வகை மாத்திரைகளை உபயோகிக்கலாம் மறந்தும் கூட IbuProfen(இபுபுரோபென்)வேண்டாம், இபுபுரோபென்/ஐபுப்ரோபென் உடலின் வலி மற்றும் infalmmation வீக்கம் குறைக்க எதிர்ப்புசக்தியை மட்டுப்படுத்தும், எனவே வேண்டாம். டாக்டர் சொல் பேச்சு கேட்பது தான் சிறந்த வழி .
12. இருமும்போதும் தும்மும்போதும் உங்களின் முழங்கையால் மூடி இருமவும்/தும்மவும், இதுஉபத்திரவமில்லாதது, இது நம் ஊரில் அதிகம் பின்பற்றப்படுவதில்லை, இதன் மூலம் நீங்கள் பிறருக்கு தெரியாமல் கை கொடுக்க நேரிட்டாலும் அவருக்கு பரவாது, இது கொரோனா மட்டும் இன்றி இன்னும் பல குளிர் காய்ச்சலுக்கும் பொருந்தும். இது அனைவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று. நீங்கள் முழங்கையால் கதவு திறப்பது எல்லாம் செய்து விட்டு அதிலேயே தும்மினால் கம்பேனி பொறுப்பேற்காது :) 

Image result for sneezing in elbow

#கொரோனா வெல்வோம் 

No comments:

Blog Widget by LinkWithin